எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கென்னத் பீட்டர்சன்கட்டுரைகள்

மாறா தேவன்

புகழ்பெற்ற உருவப்புகைப்படம் ஒன்று ஒரு நபரின் காலணிச்சுவடுகளை சாம்பல் பின்னணியில் காட்டியது. இது விண்வெளி வீரர் “பஸ் ஆல்ட்ரின்” 1969 இல் சந்திரனில் விட்டுச் சென்ற கால்தடமாகும். கால்தடங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் மாறாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரனில் காற்று மற்றும் நீர் இல்லாததால், எதுவும் அரிக்கப்படுவதில்லை. எனவே சந்திர நிலப்பரப்பில் என்ன நடந்தாலும் அது அப்படியே இருக்கும்.

 

தேவனின் நிலையான பிரசன்னத்தை பற்றி நினைக்கும் போது அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. யாக்கோபு எழுதுகிறார், "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக்கோபு 1:17). அப்போஸ்தலன் இதை நம்முடைய சொந்த போராட்டங்களின் அடிப்படையில் எழுதுகிறார்: "என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (வ. 2,3) ஏனென்றால் நாம் ஒரு உன்னதமான மற்றும் மாறாத தேவனால் நேசிக்கப்படுகிறோம்!

 

கஷ்டநேரங்களில், தேவனின்  மாறா உதவியை நினைவில் கொள்ளலாம். ஒரு மகத்தான பாமாலையை நினைவுபடுத்தலாம்: "நீர் உண்மையுள்ளவர் என் அன்பின் தேவா!மாறாத கர்த்தரே நீர் என் பிதா! நீரே கர்த்தர், நீர் ஐஸ்வர்யமுள்ளவர், சதா காலமும் நீர் மாறாதவர்". ஆம், நம் தேவன் தம்முடைய நிரந்தர காலடியை இவ்வுலகில் விட்டுவிட்டார். அவர் எப்பொழுதும் நமக்காக இருப்பார். அவருடைய உண்மை பெரிது.                                                        

இருதயத்தின் இடங்கள்

இங்கே சில விடுமுறை ஆலோசனைகள் உள்ளது: அடுத்த முறை நீங்கள் அமெரிக்காவின் விஸ்கான்சின் மிடில்டன் வழியாக பயணிக்கும்போது, தேசிய கடுகு அருங்காட்சியகத்தைப் பார்வையிட விரும்பலாம். ஒரு கடுகில் அப்படி என்ன இருக்கிறது என்று யோசிப்பவர்களை, உலகம் முழுவதிலும் உள்ள 6,090 விதமான கடுகுகளைக் கொண்ட இந்த இடம் வியப்புக்குள்ளாக்குகிறது. மெக்லீன், டெக்சாஸில், முள்வேலி அருங்காட்சியகம் முழுவதும் சுற்றித்திரிவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அங்கே வேலிகள் அமைக்கப்பட்டிருக்கும். 

அந்த வேலிகள், நாம் எதுபோன்ற காரியங்களை பார்வையிடவேண்டும் என்பதை நமக்கு வரையறுக்கின்றன. ஒரு எழுத்தாளர், “வாழைப்பழ அருங்காட்சியகத்தில் ஒரு பிற்பகல் நேரத்தை செலவிடுவதை விட மோசமாக நீங்கள் செய்ய முடியும்” என்று கூறுகிறார். 

நாம் வேடிக்கையாக சிரிக்கலாம். நம்முடைய இருதயம் என்னும் அருங்காட்சியகத்தில் நாம் சில விக்கிரகங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்பது உண்மை. தேவன், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” (யாத்திராகமம் 20:3) என்றும் “நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்” (வச. 5) என்றும் கட்டளையிடுகிறார். ஆனால் நாம், ஐசுவரியம், இச்சை, வெற்றி, என்று பல இருதயத்தின் நினைவுகளை நம்முடைய விக்கிரகமாய் ஏற்படுத்தி, அவற்றை இரகசியமாய் ஆராதனை செய்துகொண்டிருக்கிறோம். 

இதைப் படித்துவிட்டு, சொல்லவரும் காரியத்தை தவறவிடுவது இயல்பு. ஆம், நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொண்ட பாவ அருங்காட்சியகத்தை தேவன் நம்முடைய பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். அவரை நேசிப்பவர்களுக்கு “ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” (வச. 6) என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். நம்முடைய அருங்காட்சியகங்கள் எவ்வளவு சீர்கேடானது என்பது அவருக்கு தெரியும். அவர் மீதான அன்பில் மாத்திரமே நம்முடைய மெய்யான திருப்தி அமைந்திருக்கிறது என்பதும் அவருக்கு தெரியும்.

துக்கமும் மகிழ்ச்சியும்

ஏஞ்சலாவின் குடும்பம் நான்கு வாரங்களில் மூன்று பேரை இழந்ததால் சோகத்தில் தள்ளாடியது. அவரது மருமகனின் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஏஞ்சலாவும் அவரது இரண்டு சகோதரிகளும் மூன்று நாளாக உணவு மேசையை சுற்றி அமர்ந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். மேசனின் இழப்பைக் குறித்து அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களது இளைய சகோதரிக்குள் வளர்ந்து வரும் புதிய கருவின் அசைவுகளைக் காண்பிக்கும் அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

அவ்வப்போது ஏஞ்சலா பழைய ஏற்பாட்டின் எஸ்றா புத்தகத்தைப் பார்த்து தேறுதல் அடைந்துகொள்வாள். பாபிலோனியர் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி, அவர்களை சிறைபிடித்த பின்னர், தேவ ஜனம் எருசலேமுக்கு திரும்புவதைக் குறித்த தகவலை அது பதிவுசெய்துள்ளது (எஸ்றா 1). ஆலயம் மறுபடியும் எடுப்பித்து கட்டப்படுவதை எஸ்றா பார்த்த பிறகு, தேவனுக்கு துதி ஏறெடுக்கும் சத்தத்தை அவர் கேட்கிறார் (3:10-11). ஆனால் சிறையிருப்பிற்கு முன்னர் மக்களின் துக்கமான அழுகுரல்களையும் அவர் கேட்டிருக்கிறார் (வச. 12). 

ஏஞ்சலாவுக்கு ஒரு வசனம் மிகவும் பிடித்திருந்தது: “ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது” (வச. 13). அவள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாலும், அங்கிருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டாள். 

நாமும் நமக்கு நெருங்கியவர்களுடைய இழப்பைக் குறித்து துக்கங்கொண்டாடலாம். அப்படியென்றால், அவர் நம்மை அவருடைய புயங்களுக்கு நடுவில் அணைத்து சேர்த்துக்கொள்வார் என்று நம்பி நம்முடைய துக்கங்களை மகிழ்ச்சியோடு கூடிய தருணங்களோடு அவரிடத்தில் வெளிப்படுத்தக்கடவோம். 

பாட்டியின் ஆராய்ச்சி

எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பாட்டிமார்களின் மூளையை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு முன்பாக அவர்களுடைய மகனுடைய போட்டோவையும், பேரக் குழந்தையின் போட்டோவையும், அவர்களுக்கு அறிமுகமில்லாத இன்னொரு குழந்தையின் போட்டோவையும் காண்பித்து அவர்களின் உணர்ச்சி அனுதாபங்கள் பரிசோதிக்கப்பட்டது. அதில் தங்களுடைய சொந்த பிள்ளைகளை விட தங்கள் பேரப்பிள்ளைகளின் மீதான அனுதாபங்கள் அவர்களுக்கு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய சொந்த பிள்ளையைக் காட்டிலும் பேரப்பிள்ளைகள் அதிக அபிமானமாக தெரிவதால், இதனை “அழகான காரணி” என்று அழைக்கின்றனர். 

“இதிலென்ன ஆச்சரியம்” என்று நீங்கள் சொல்லுவதற்கு முன்னால் அந்த ஆராய்ச்சியை செயல்படுத்திய ஜேம்ஸ் ரில்லிங் என்பவரின் கூற்றைக் கேட்போம். அவர், “அவர்களின் பேரக்குழந்தை சிரிக்கும்போது, பாட்டியும் சிரிக்கிறாள்; அவர்களின் பேரக்குழந்தை அழும்போது, பாட்டி, அதின் வலியையும் வேதனையையும் உணருகிறாள்” என்று சொல்லுகிறார். 

தேவன் தன்னுடைய ஜனத்தைப் பார்க்கும்போது அவருடைய “எம்.ஆர்.ஐ ஸ்கேனை” ஒரு தீர்க்கதரிசி வரைகிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதனை சிலர் வேறுவிதமாகவும் மொழிபெயர்க்கின்றனர்: நீ அவருடைய இருதயத்தை திருப்தியடையச் செய்வாய், அவர் கெம்பீரமாய் பாடுவார்.” ஒரு அன்பான பாட்டியாய் தேவன் நம்முடைய வேதனையை அறிகிறார். “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (ஏசாயா 63:9). “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்” (சங்கீதம் 149:4). 

நாம் சோர்வுறும்போது, நம்மைக் குறித்த தேவனுடைய உணர்வுகள் மெய்யானவைகள் என்பதை நினைவுகூருவது நல்லது. அவர் நம்மை பொருட்படுத்தாமல் எங்கேயோ தூரத்தில் வாழும் தேவனல்ல. அவர் நம்மில் மகிழ்ந்திருக்கிற தேவன். இது அவரை நாம் கிட்டிச்சேருகிற நேரம். அவருடைய புன்னகையை உணருவோம்; அவர் பாடலைக் கேட்டு ரசிப்போம்.

தேவன் நம்மோடு பேசுகிறார்

அறியாத ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாய் அதுபோன்ற அழைப்புகளை நான் எடுப்பதில்லை. ஆனால் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அதில் பேசிய நபர், ஒரு சிறிய வேதாகம செய்தியை ஒரு நிமிடத்தில் பகிர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். அவர் வெளிப்படுத்தல் 21:3-5இல் உள்ள “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, இயேசுவைக் குறித்தும் அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயத்தைக் குறித்தும் குறிப்பிட்டார். நான் இயேசுவை ஏற்கனவே என் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னேன். அவர் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நான் அவரோடு சேர்ந்து ஜெபிக்க அவர் விரும்பினார். அவர் எனக்காய் ஜெபிக்கும்போது, என்னுடைய ஊக்கத்திற்காகவும் பெலத்திற்காகவும் ஜெபித்தார். 

அந்த அழைப்பானது வேதத்தில் இடம்பெற்றுள்ள, சிறுவன் சாமுவேலின் அழைப்பை எனக்கு நினைவுபடுத்தியது (1 சாமுவேல் 3:4-10). சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அது ஆசாரியனாகிய ஏலியின் சத்தம் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் ஏலியின் ஆலோசனையின் பேரில் கடைசி முறை தேவனுடைய சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில், “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வச. 10) என்று பதில் சொன்னான். அதுபோல இரவும் பகலும் தேவன் நம்மோடு பேசக்கூடும். நாம் அவருடைய சத்தத்தை உடனே அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்றால், அவருடைய சமூகத்தில் அதிக நேரம் செலவழிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். 

அந்த அழைப்பை நான் வேறொரு கோணத்திலும் சிந்தித்தேன். நாம் மற்றவர்களுக்கு தேவனுடைய தூதுவர்களாகவும் செயல்பட நேரிடலாம். நாம் மற்றவர்களுக்கு எந்தவிதத்தில் உதவிசெய்யக் கூடும் என்று எண்ணத் தோன்றலாம். தேவனுடைய ஆலோசனையோடு, யாரையாவது தொலைபேசியில் அழைத்து, “நான் உங்களுக்காக இன்று ஜெபிக்கலாமா?” என்ற கேட்க முற்படலாம்.  

வசன பயிற்சி

1800 களின் பிற்பகுதியில், வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கான யுக்திகளை உருவாக்கினர். முதலாவது 1877 இல் கனடாவின் மாண்ட்ரீலில். பின்னர் 1898 இல், நியூயார்க் நகரில் மற்றொரு கருப்பொருளில் யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 வாக்கில், வட அமெரிக்காவில் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இதுபோன்ற சுமார் ஐயாயிரம் நிகழிச்சிகள் செயல்பாட்டில் இருந்தது.

இவ்வாறுதான் கோடை விடுமுறை வேதாகம பள்ளியின் ஆரம்பக்கால வரலாறு தொடங்கியது. வாலிபர்களும் வேதாகமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அந்த விபிஎஸ் முன்னோடிகளின் பேரார்வத்தைத் தூண்டியது.

.பவுல் தனது இளம் சீடரான தீமோத்தேயு மீது இதேபோன்ற ஆர்வத்தை கொண்டிருந்தார். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" நாம் "எந்த நற்கிரியையுஞ் செய்ய.. பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்றெழுதினார் (2தீமோத்தேயு 3:16-17). இது ஏதோ, 'வேதத்தைப் படிப்பது உனக்கு நல்லது' என்பது போன்ற மேலோட்டமான ஆலோசனையல்ல. பவுல் "ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற" வ.7) கள்ள போதகர்கள் எழும்பும் “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று" (வச.1) கடுமையாய் எச்சரித்தார். வேதாகமத்தின் மூலம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது (வ. 15).

வேதத்தை படிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது பெரியவர்களுக்கும்தான். அது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல; அது ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், "பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்று" (வச.15), இதனால் நாமும் சிறுவயது துவங்கியே வேதம் கற்கவேண்டும் என்றல்ல. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், வேத ஞானம் நம்மை இயேசுவோடு இணைக்கிறது. இது நம் அனைவருக்குமான தேவனின் விபிஎஸ் பாடம்.

இயேசுவை காணுதல்

நான்கு மாத வயதில், லியோ தனது பெற்றோரைப் பார்த்ததில்லை. அவன் குறைபாட்டுடன் பிறந்ததால், பார்வை மங்கலாக இருந்த்து. அவனுக்கு அடர்ந்த மூடுபனியில் வாழ்வது போல் இருந்தது. ஆனால் கண் மருத்துவர்கள் அவனுக்கு சிறப்புக் கண்ணாடிகளைப் பொருத்தினர்.

லியோவின் கண்களுக்கு மேல் புதிய கண்ணாடியை அவன் அம்மா வைத்ததை அவன் அப்பா காணொளியாக வெளியிட்டார். லியோவின் கண்கள் மெதுவாகக் கவனம் செலுத்துவதை நாங்கள் பார்த்தோம். அவன் அம்மாவை முதன்முறையாகப் பார்க்கும்போது அவன் முகத்தில் ஒரு புன்னகை பரவியது. விலைமதிப்பற்ற அந்த நேரத்தில், சிறுவன் லியோ தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இயேசு தம் சீடர்களுடன் நடத்திய உரையாடலை யோவான் தெரிவிக்கிறார். பிலிப்பு அவரிடம், "பிதாவை எங்களுக்குக் காண்பியும்"(யோவான் 14:8) எனக் கேட்டார். அவருடன் இருந்த இத்தனை நாட்களுக்கு பிறகும் கூட இயேசுவின் சீடர்களால் தங்கள் முன்னிருந்தவரை அறிந்துகொள்ள இயலவில்லை. "நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?" (வ.10) என்று இயேசு பதிலளித்தார். முன்னதாக இயேசு, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" (வ.6) என்று கூறியிருந்தார். "நானே" என்று இயேசு கூறிய ஏழு கூற்றுகளில் இது ஆறாவதாகும். இந்த "நானே" என்கிற கூற்றுகள் வழியாக அவர் உண்மையிலே யாரென்று பார்க்கும்படி நம்மிடம் சொல்கிறார். அவர் தேவன்.

நாமும் சீடர்களைப் போலத்தான். கடினமான காலங்களில், தெளிவாக நம்மால் பார்க்க இயலாது. தேவன் என்ன செய்தார், என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தத் தவறுகிறோம். சிறுவன் லியோ சிறப்புக் கண்ணாடிகளை அணிந்தபோது, ​​​​அவரது பெற்றோரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. நாமும் "தேவ கண்ணாடியை" அணிய வேண்டும், அதனால் இயேசு உண்மையில் யார் என்பதை நாம் தெளிவாகக் காணலாம்.

ஆண்டவரே, நீர் யார்?

தன்னுடைய பதினாறாம் வயதில், கொக்கெய்ன் என்னும் போதை மருத்தை விற்றதற்காய் லுய்ஸ் ரோட்ரிகெஸ் ஏற்கனவே சிறைக்கு சென்றிருக்கிறான். தற்போது, கொலை முயற்சிக்காய் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். அவனுடைய குற்றமனசாட்சியில் தேவன் அவனோடு இடைபட்டார். சிறைக்கம்பிகளுக்கு இடையில் இருக்கும்போது, தன் சிறுபிராயத்தில் தன்னை தவறாமல் திருச்சபைக்கு கூட்டிச்சென்ற தன்னுடைய தாயாரின் செய்கையை நினைவுகூர்ந்தான். தேவன் அவனுடைய இருதயத்தில் கிரியை செய்வதை உணர்ந்தான். லுய்ஸ் தன்னுடைய பாவத்தை விட்டு மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டான். 

அப்போஸ்தலர் நடபடிகளில், பவுல் என்று பின்நாட்களில் அறியப்பட்ட சவுல் என்னும் வைராக்கியமான மனிதனைக் குறித்து பார்க்கமுடியும். அவன் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தான் (அப்போஸ்தலர் 9:1). ஸ்தேவானைக் கொலை செய்த கூட்டத்தின் தலைவனாயிருந்திருக்கிறான் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறது (7:58). சவுலின் இந்த மனசாட்சியோடு தேவன் இடைபடுகிறார். தமஸ்குவுக்கு போகும் வழியில், சவுலின் கண்கள் குருடாக்கப்பட்டு, இயேசு அவனிடம் “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” (9:4) என்று கேட்டார். அதற்கு சவுல், “ஆண்டவரே, நீர் யார்” (வச. 5) என்றான். அதுவே அவனுடைய புதிய வாழ்க்கையின் துவக்கம். அவன் இயேசுவை நாடி வந்தான். 

லுய்ஸ் ரோட்ரிகெஸ் ஆயுள் தண்டனைக்கு இடையில் பரோலில் வெளிவந்தான். அதிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் சென்ட்ரல் அமெரிக்காவிலும் இருக்கக்கூடிய சிறைச்சாலைகளில் சுவிசேஷ ஊழியங்களில் ஈடுபடத் துவங்கினான். 

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் மோசமான காரியங்களிலிருந்து தேவன் நம்மை விடுவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் நம்முடைய இதயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி நம் மனசாட்சியோடு இடைபடுகிறார். இதுவே நம் பாவங்களில் இருந்து மனந்திரும்பி இயேசுவண்டை வருவதற்கான தருணம்.

வாழ்வின் அர்த்தம்

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்க்கே லூயிஸ் போர்க்கஸ் என்பவர் எழுதிய ஒரு சிறுகதையில் ரோம போர் சேவகனாக இருக்கும் மார்க்கஸ் ரூபஸ் எனும் கதாபாத்திரம், "மனிதர்களுக்கு சாவாமை தரும் ரகசிய நதியின்" தண்ணீரைக் குடிக்கிறான். சாவாமைக்குள் கடந்துபோகும் அவன் காலப்போக்கில், தான் சாவாமை குறித்து எண்ணியவையெல்லாம் தவறு என்பதையும், குறிக்கோளற்ற இந்த எல்லையில்லா வாழ்வு அர்த்தமற்றது என்றும் புரிந்துகொள்கிறான். அதற்கு மாற்றுமருந்தாக ஒரு தெளிவான நீரூற்றைக் கண்டுபிடிக்கும் மார்க்கஸ், அதிலே பருகியவுடன் மீண்டும் சாதாரண மனிதனாகிறான். அதை உறுதிப்படுத்த முள்ளில் தன் கையை தேய்க்க, அவனுக்கு ரத்தமும் வருகிறது.

மார்கஸை போலவே  நாமும் சிலநேரம் வாழ்வின் முடிவையும் மரணத்தின் எதிர்பார்ப்பையும் எண்ணி விரக்தியடைகிறோம் (சங்கீதம் 88:3). மரணம் வாழ்விற்கு அர்த்தம் தருவதாக நாம் எண்ணுகிறோம், ஆனால் இதில் தான் நாம் தவறுகிறோம்.  மார்கஸை போலல்லாமல், கிறிஸ்துவின் மரணத்தில் நமது வாழ்வின் உண்மையான அர்த்தத்தை நாம் கண்டடைவோம். அவர் தம்முடைய  ரத்தத்தைச் சிலுவையில் சிந்தி (கிறிஸ்து) மரணத்தை வென்று, அதை ஜெயமாக விழுங்கினார் (1 கொரிந்தியர்  15:54). நமக்கான மாற்றுமருந்து ஜீவ நீரூற்றாகிய (யோவான் 4:10) இயேசுவிடம் உள்ளது.  நாம் அதைப் பருகுவதால், மரணம் வாழ்வு மற்றும் சாவாமை ஆகியவற்றின் விதிகள் மாறுகின்றன (1 கொரிந்தியர் 15:52).

உடல்ரீதியாக நாம் மரிப்பது மெய்தான். ஆனால் அது முடிவில்லை. மரணம், வாழ்க்கை இவைகளைக்குறித்த நமது விரக்தியை இயேசு தலைகீழாக்கி விட்டார் (எபிரெயர் 2:11–15). கிறிஸ்துவுக்குள் நமக்குப் பரலோக நம்பிக்கையும், அவருடனே கூட அர்த்தமுள்ள நித்தியஜீவ சந்தோஷமும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.